விருதுநகர்,பிப்.16: விருதுநகர் எஸ்பி அலுவலகத்தில், சாத்தூர் படந்தால் அழகாபுரியை சேர்ந்த கூடலிங்கம் அளித்த மனு: போத்தி ரெட்டியபட்டியை சேர்ந்தவரிடம் 2017ம் ஆண்டு ரூ.20ஆயிரம் 10 சதவீத வட்டிக்கு வாங்கி மாதம் ரூ.2000 செலுத்தி வந்தேன். உடல்நிலை சரியில்லாமல் போனதால் மேலும் ரூ.40ஆயிரம் வார வட்டிக்கு வாங்கி அதற்கும் முறையாக வட்டி செலுத்தினேன்.
கடந்த 4 ஆண்டுகளில் ரூ.60 ஆயிரத்திற்கு ரூ.1,50லட்சம் வட்டி கட்டி உள்ளேன். தற்போது வட்டி செலுத்த முடியாத நிலையில், 3 மாதத்தில் வாங்கிய பணத்தை செலுத்தி விடுவதாக கூறினேன். உடனே ரூ.2லட்சம் கொடு, இல்லை என் வீட்டில் ஆடு மேய்க்க வாடா’ என கடன் கொடுத்தவர் மிரட்டுகிறார். போலீஸ் நிலையத்தில் புகார் அளிப்பேன் என்றால், ரவுடிகளை வைத்து மிரட்டுகிறார்.
இதுகுறித்து சாத்தூர் நகர் போலீசில் ஜன.21ல், விருதுநகர் எஸ்பி அலுவலகத்தில் ஜன.22ல் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. பிப்.12 விசாரணையில் கந்து வட்டிகாரருக்கு ஆதரவாக சாத்தூர் போலீசார் அலைக்கழிப்பு செய்கின்றனர். சிடி ஆதாரங்கள் இருப்பதால் உரிய விசாரணை நடத்தி கந்துவட்டிகாரரிடம் இருந்து காப்பாற்ற வேண்டுமென தெரிவித்துள்ளார். மனுவை பெற்றுக் கொண்ட எஸ்பி பெருமாள், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.