×

பாராளுமன்ற தேர்தலைவிட பெரிய வெற்றியை திமுகவுக்கு தமிழக மக்கள் தர இருக்கிறார்கள்

காங்கயம்,பிப்.16:  பாராளுமன்ற தேர்தலைவிட சட்டசபை தேர்தலில் தி.மு.க.விற்கு பெரிய வெற்றியை தமிழக மக்கள தர இருக்கிறார்கள் என காங்கயத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். காங்கயம் அருகே நத்தக்காடையூரில் தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மற்றும் சிவசேனாபதி கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் காங்கயம் கால்நடை திருவிழா நேற்று நடந்தது. தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சாமிநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன், தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., காங்கயம் வடக்கு ஒன்றிய செயலாளர் சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கால்நடை திருவிழாவில் பங்கேற்பதற்காக 500க்கும் மேற்பட்ட காங்கயம் இன காளைகளை அவற்றினை வளர்ப்பவர்கள் அழைத்து வந்திருந்தனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் காளைகளை பார்வையிட்ட பின் பேசியதாவது: பாராளுமன்ற தேர்தலில் எப்படி மிகப்பெரிய வெற்றியை மக்கள் கொடுத்தார்களோ அதைவிட பெரிய வெற்றியை வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் தி.மு.க.விற்கு கொடுக்க இருக்கிறார்கள். இன்னும் தேர்தல் வர 2 அமாவாசைதான்  இருக்கிறது. அதன்பிறகு ஆட்சியில் இருக்கும் 2 அமாவாசையையும் துரத்தி மோடிக்கு பாடம் எடுக்கப்படும்.

மேடையில் பிரதமர் மோடி திருக்குறள், அவ்வையார் பாடல் போன்றவற்றை மேற்கோள் காட்டி பேசுகிறார்.  ஆனால் தமிழ் வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை. சமஸ்கிருதத்தை உள்ளே நுழைக்க பார்க்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்கு வந்தபோது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி 2 வருடமாகிவிட்டது. இன்னும் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை. மோடியின் பாசிச ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடியவர் ஸ்டாலின் மட்டும்தான். இங்குள்ள முதல்வரும், துணை முதல்வரும் யார் மிகச்சிறந்த அடிமை  என பார்க்கலாம் என்று போட்டி போட்டிக்கொண்டு ஜால்ரா அடிக்கின்றனர். வெற்றிநடை போடும் தமிழகம் என விளம்பரம் கொடுக்கிறார்கள். காஸ் விலை, பெட்ரோல் விலையை குறைக்க வக்கில்லாமல் மோடி ஆட்சிக்கு ஜால்ரா அடித்து வருகின்றனர்.

எதிர்காலமாக இருந்த மாணவர்களின் கல்வி உரிமைகள்கூட பறி போய்விட்டன.  தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு அடியோடு ரத்து செய்யப்படும். மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் காக்கப்படும் என ஸ்டாலின் உறுதி கொடுத்துள்ளார். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சென்னை வந்த பிரதமர் மோடி முதல்வர், துணை முதல்வர்கள் கையை பிடித்தபடி போஸ் கொடுத்ததை நினைத்து பார்த்தேன். அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் கையை பிடித்துக் கொண்டும் பிரதமர் மோடி இதேபோல்தான் நின்றார். தற்போது ட்ரம்பை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். அதுபோலத்தான் தமிழகத்திலும் நடக்க போகிறது.

நீட் தேர்வு ரத்து தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி அ.தி.மு.க. சார்பில் அனுப்பப்பட்டது. ஆனால் அதை டிஸ்மிஸ் செய்து திருப்பி அனுப்பியதை மறைத்த அரசாங்கம் இது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், என்னுடைய முதல் போராட்டம் நீட் தேர்வு ரத்து தொடர்பாகத்தான். தி.மு.க. சார்பில் சட்டப்போராட்டம் செய்து நிச்சயம் நீட் தேர்வை ரத்து செய்வோம். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார். தே.மு.தி.க.விற்கு அழைப்பு விடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு, ‘‘அதுபோன்ற முடிவுகளை ஸ்டாலின்தான் எடுப்பார்’’ என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags : Tamil Nadu ,DMK ,elections ,
× RELATED மக்களவை தேர்தல் : 30-ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகிறது!!