தோகைமலை, பிப்.12: தோகைமலை அருகே கல்லடை ஊராட்சி கீழவெளியூர் பகுதி பிள்ளையார் கோவில்பட்டியை சேர்ந்தவர் ராமன்(60). இதே போல் இதே பகுதியில் வசிப்பவர் முத்துக்கண்ணு(52). இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ராமனின் மனைவி ரங்கம்மாள் என்பவர் தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த முத்துகண்ணு மற்றும் அவரது உறவினர் பாரதி(30), வளர்மதி(42), அஞ்சலை(42) ஆகியோர் ஒன்று சேர்ந்து ரங்கமாளை தகாத வார்த்தையால் திட்டி உள்ளனர். மேலும் அவரை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த ரெங்கம்மாள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ராமன் தோகைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் முத்துக்கண்ணு, பாரதி, வளர்மதி, அஞ்சலை ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.