×

மதுபோதையால் மெக்கானிக் பலி

திருச்சி, பிப். 12: திருச்சி உறையூர் மின்னப்பன் தெருவை சேர்ந்த நாகேந்திரன்(எ) சரவணன்(38). மெக்கானிக். மதுவிற்கு அடிமையானவர். கடந்த 3 வருடமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. அவ்வப்போது வலிப்பு நோயும் ஏற்படுமாம். இதற்காக டாக்டர்களிடம் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிக மதுகுடித்து விட்டு வீட்டிற்கு செல்ல நாச்சியார்கோவில் பஸ் நிறுத்தம் ஆட்டோ ஸ்டாண்டு அருகே சென்ற போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து தம்பி துரைராஜ் அளித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

செல்போன், பணம் கொள்ளை திருச்சி வயலூர் ரோடு உய்யகொண்டான் திருமலை சண்முகா நகரை சேர்ந்தவர் சதீஷ் (33). டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வந்து மனைவியும், அவரும் ஒரு அறையில் தூங்கினர். நேற்று அதிகாலை சதீஷ் எழுந்து வந்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நள்ளிரவு மர்ம நபர்கள் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து 2 செல்போன்கள், ரூ.4,500 ரொக்கத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சலவை கடையில் முதியவர் தற்கொலை திருச்சி உறையூர் வள்ளலார் நகரை சேர்ந்தவர் ராமசந்திரன் (70). விவசாயி. சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். அதே பகுதி குழுமணி சாலையில் சலவை தொழில் செய்யும் கடை உள்ளது. இந்த கடைக்கு கதவு கிடையாது. நேற்றுமுன்தினம் அந்த கடையின் உத்தரத்தில் ராமசந்திரன் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். உறையூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
புரோட்டா கடைக்காரர் மாயம் உறையூர் காமாட்சியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (37). சாலைரோட்டில் புரோட்டா கடை வைத்துள்ளார். கொரோனா காலத்தில் கடை மூடப்பட்டதால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி தாயின் போட்டோவை வங்கியில் கொடுத்துவிட்டு வருவதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து தந்தை பிச்சை அளித்த புகாரின்பேரில் உறையூர் போலீசார் கார்த்திகேயனை தேடி வருகின்றனர்.

Tags : Mechanic ,
× RELATED டூவீலர் மெக்கானிக் சங்க மாநில செயற்குழு கூட்டம்