மன்னார்குடி, பிப்.12: மன்னார்குடி அடுத்த பரவாக்கோட்டை அருகே உள்ளிக்கோட்டை கடை வீதியில் அகமதுசலாவுதீன்(56) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். அதே பகுதியில் ஐயப்பன்(எ)சிவகுரு(45) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். சிவகுரு ஓட்டலுக்கு தேவையான மளிகை பொருட்களை அகமதுசலாவுதீன் கடையில் வாடிக்கையாக வாங்கி வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம் சிவகுரு மளிகை கடைக்கு சென்று கடனுக்கு பொருட்களை கேட்டுள்ளார். பழைய பாக்கி பணத்தை கொடுத்தால்தான் மேற்கொண்டு பொருட்கள் தரமுடியும் என அகமதுசலாவுதீன் கூறினார். இதனால் இருவரிடையே வாக்குவாதம் நடந்தது. இதில் ஆத்திரமடைந்த சிவகுரு மளிகை கடையின் முன்புறம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த முட்டை உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்ததோடு முகமது சலாவுதீனை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து முகமது சலாவுதீன் பரவாக்கோட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அழகம்மை, எஸ்எஸ்ஐ ராஜ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சிவகுருவை கைது செய்தனர்.