சிவகிரி, பிப். 12: சிவகிரி அருகே உள்ள ராயகிரியில் ஐயப்ப சேவா சங்கம் செயல்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இச்சங்கம், பல்வேறு சமூக சேவை பணிகளை மேற்கொண்டு உள்ளது. இச்சங்கத்தை நிர்வகிப்பதில்பிரச்னை ஏற்பட்டு நிர்வாகிகள் இருதரப்பாக பிரிந்து செயல்பட்டு வந்தனர். மேலும் மோதல்களும், கைகலப்பும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இருதரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இப்பகுதியில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், தென்காசி கலெக்டர் சமீரன் உத்தரவுப்படி சங்கரன்கோவில் கோட்டாட்சியர் முருகசெல்வி அறிவுறுத்தலின் பேரில், நேற்று ராயகிரி ஐயப்ப சேவா சங்க வளாகத்திற்கு சிவகிரி தாசில்தார் ஆனந்த் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். துணை தாசில்தார் சரவணன், வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் அந்தோணி, எஸ்ஐக்கள் மாரியப்பன், கணேசன், வருவாய் அலுவலர் முத்துக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். சீல் வைக்கப்பட்ட சங்க வளாகத்தில் ஐயப்பன் கோயில், திருமண மண்டபம் உள்ளது குறிப்பிடத்தக்கது.