கெங்கவல்லி, பிப்.12: கெங்கவல்லி அருகே வீரகனூர் ஏரி உபரிநீரை, இலுப்பநத்தம் அருகிலுள்ள நாட்டார் அக்ரஹாரம் பகுதிக்கு விநியோகம் செய்ய, தனிநபர்கள் சிலர் அனுமதியின்றி குழாய் பதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆத்தூர்-வீரகனூர் தேசிய நெடுஞ்சாலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அனுமதியின்றி பள்ளம் தோண்டி ராட்சத குழாய் பதிக்கப்பட்டது. சாலையை தோண்டி குழாய் பதித்தால், கனரக வாகனங்கள் விபத்தில் சிக்கும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இவற்றை கண்டு கொள்ளாமல், ஆளுங்கட்சியினர் துணையுடன் அவர்கள் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், குழாய் பதித்து 2 மணி நேரத்தில், அவ்வழியாக சென்ற லாரி பள்ளத்தில் சிக்கியது. இதையடுத்து, பலமணி நேர போராட்டத்திற்கு பின் அந்த லாரி மீட்கப்பட்டது. எனவே, அனுமதியின்றி குழாய் பதித்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.