×

திருவில்லி.யில் ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திருவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முத்தையா, வைரவன் தலைமை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் லியாகத் அலி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஜாக்டோ - ஜியோ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
இன்ஸ்பெக்டர்கள்  இடமாற்றம்
தென்மண்டலத்தில் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில்  அருப்புக்கோட்டை டவுன் காவல்நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த  பாலமுருகன் மதுரை மாவட்டம் சிலைமானுக்கும், சோழவந்தான் காவல்நிலையத்தில் பணிபுரியும் வசந்தி அருப்புக்கோட்டை டவுன்காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். அருப்புக்கோட்டைஅணைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் தென்றல் திண்டுக்கல் சரகத்திற்கும், மதுரை மேலூர்அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர்  காஞ்சனாதேவி அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கும், அருப்புக்கோட்டை போக்குவரத்து காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் திண்டுக்கல் சரகத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். நரிக்குடி இன்ஸ்பெக்டர் மூக்கன் திண்டுக்கல் சரகத்திற்கும், மதுரை என்பி கோட்டை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ராம்நாராயணன் நரிக்குடிக்கும், காரியாபட்டி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மதுரை கொட்டம்பட்டிக்கும், கொட்டம்பட்டி இன்ஸ்பெக்டர் சாந்தி காரியாபட்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பாசிப்பயறு கொள்முதல்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில் ராபி பருவத்தில் விவசாயிகளிடம் இருந்து 60 மெட்ரிக் டன் பாசிப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருதுநகர், அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் கொள்முதல் துவங்கி உள்ளது. பாசிப்பயரில் இதர பொருட்கள் 2%, இதர தானிய கலப்பு 3 %, சேதமடைந்த பருப்புகள் 3 %, சிறிதளவு சேதமடைந்த பருப்புகள் 4%, முதிர்வடைந்த மற்றும் சுருங்கிய பருப்புகள் 3 %, வண்டுகள் தாக்கிய பருப்புகள் 4%, ஈரப்பதம் 12 சதவீதங்களுக்கு மிகாமல் நிர்ணயிக்கப்பட்ட சராசரி தரங்களுடன் இருக்க வேண்டும். பாசிப்பயறு கிலோ ரூ.71.96 என்ற குறைந்த பட்ச ஆதார விலையில் ஏப்.18ம் தேதி வரை கொள்முதல் செய்யப்படும். பாசிப்பயறு கொள்முதல் தொகை விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். பாசிப்பயறு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களது நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி புத்தக நகல் ஆகியவற்றுடன் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர்களை அணுகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
விழிப்புணர்வு கூட்டம்
விருதுநகர் அருகே மெட்டுக்குண்டு கிராமத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் விழிப்புணர்வு கூட்டம் ஊராட்சி தலைவர் சுப்புராஜ் தலைமையில் நடைபெற்றது. மனித உரிமைகள் குறித்து டிஎஸ்பி விஜயகுமார் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் புள்ளியியல் ஆய்வாளர் ஹேமசுதா, சைல்டுலைன் சாரதா, செல்வமணி, தொழிலாளர் திட்ட ஆதிலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.
மகளிர் கல்லூரியில் விழா
அருப்புக்கோட்டை ரமணாஸ் மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு துவக்க மற்றும் அறிமுகவிழா நடந்தது. துணை முதல்வர் பெளர்ணா வரவேற்றார். முதல்வர் கதிர்காமு தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் இளங்கோவன் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். ரமணாஸ் கல்வியியல் கல்லூரி செயலாளர் பாரதிமுருகன், கல்லூரி நிர்வாகிகள் ராமச்சந்திரன், சங்கரநாராயணன், விக்னேஷ், கணிதத்துறை தலைவர் சந்திரமெளலீஸ்வரன் வாழ்த்தி பேசினர். பேராசிரியைகள் ஜெயலட்சுமி, உமா, விஜயலட்சுமி ஆகியோர் முதலாம் ஆண்டு மாணவிகளை அறிமுகம் செய்தனர். கல்லூரி டீன் தில்லைநடராஜன் நன்றி கூறினார்.
சங்க ஆண்டு விழா
அருப்புக்கோட்டையில் ஓய்வுபெற்ற அலுவலர் சங்க 34வது ஆண்டு விழா தலைவர் சின்னு தலைமையில் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் தர்மராஜ், துணைத் தலைவர் சோலை வரவேற்றனர். செயலாளர் மாரியப்பன், சுபாஷ் சந்திரபோஸ் அறிக்கைகளை சமர்ப்பித்தனர். தமிழக அரசின் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தால் ஓய்வூதியர்களுக்கு ஏற்படும் பாதிப்பை விளக்கி மாநில பிரச்சார செயலாளர் அய்யனார் பேசினர். அருப்புக்கோட்டை மீரா மருத்துவமனை மேலாளர் ஆயை மு. காஜா முகைதீன் ஓய்வூதியர்களின் செயல்பாடுகள் பற்றி பேசினார். அருப்புக்கோட்டை கனரா வங்கி முதன்மை மேலாளர் மதுகாரா கலந்து கொண்டார். இணைச் செயலாளர் ராமராஜ் நன்றி கூறினார்.
லாரி தீப்பிடித்து நாசம்
சிறுகுலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தோட்டத்திலிருந்து சோளநாற்றுகளை விற்பனை செய்ய சாத்தூரைச் சேர்ந்த பரக்கத்அலி மகன் சர்தார்அலி (27) லாரியில் ஏற்றி வந்தார்.  வரும் வழியில் குறுக்கே இருந்த மின்சாரக் கம்பியில் உராய்வு ஏற்பட்டு லாரியில்  தீப்பிடிக்க ஆரம்பித்தது. இதனை கண்ட சர்தார் அலி. தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர் 10க்கும் மேற்பட்டோர் போராடி தீயை அணைத்தனர். ஆனால் லாரி முழுவதும் எரிந்து நாசமானது. அப்பையநாயக்கன்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Demonstration ,Thiruvilli ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்