×

கிருஷ்ணகிரி அருகே எருதாட்டம் கோலாகலம் 400 காளைகள் சீறிப்பாய்ந்தன

கிருஷ்ணகிரி, பிப்.12:  கிருஷ்ணகிரி ஒன்றியம் பாலகுறியில் நடந்த எருது விடும் விழாவில் 400க்கும் அதிகமான காளைகள் பங்கேற்றன.
கிருஷ்ணகிரி ஒன்றியம் பாலகுறி கிராமத்தில், நேற்று 2ம் ஆண்டு எருது விடும் விழா நடந்தது.  காலை 8 மணிக்கு போட்டி துவங்கியது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி அண்டைய மாவட்டங்களான திருப்பத்தூர், வேலூர் மற்றும் ஆந்திரா பகுதிகளில் இருந்தும் 400க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகள் ஒரு குறிப்பிட்ட தூரத்தை ஓடி கடப்பதை ஸ்டாப் வாட்ச் மூலம் கணக்கிட்டு, அதில் எந்த காளை குறைந்த நேரத்தில் ஓடி கடந்ததோ அந்த காளையின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

அதன்படி, மொத்தம் 60 காளைகளின் உரிமையாளர்களுக்கு 10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. இந்த விழாவினை காண பாலகுறி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரண்டனர். இப்போட்டியில் காளைகளை போக்கு காட்டுவதில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும, காளைகள் முட்டியதில் 15 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.  கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை பாலகுறி ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags : bulls ,bullfight ,Krishnagiri ,
× RELATED கல்லம்பட்டி முருகன் கோயில் திருவிழா மஞ்சுவிரட்டில் சீறிய காளைகள்