×

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் கலெக்டர் திடீர் ஆய்வு

திருப்பூர்,பிப்.12:திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறையை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டருமான விஜயகார்த்திகேயன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் மாவட்டத்தில் வடக்கு, தெற்கு, அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை மற்றும் மடத்துக்குளம் என 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதியில் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வி.வி.பேட் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் அனைத்தும் திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் சீலிடப்பட்டு பாதுகாப்பு அறையில் 24 மணி நேரம் துப்பாக்கி ஏந்திய காவலருடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள சீலிடப்பட்ட பாதுகாப்பு அறையினையும் மற்றும் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்படுவதையும் மாவட்ட கலெக்டர்  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படும் நில அளவை பிரிவு, பதிவறை, வட்ட வழங்கல் பிரிவு, அரசு பொது இ.சேவை மையம் மற்றும் ஆதார் சேவை மையம் ஆகிய அலுவலகங்களையும்  கலெக்டர் விஜயகார்த்திகேயன் திடீர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்வின் போது, தெற்கு வட்டாட்சியர் மகேஷ்வரன், தேர்தல் வட்டாட்சியர் முருகதாஸ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : inspection ,collector ,room ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...