×

பேரூர் ஆற்றில் பாலம் கட்டும் பணி மீண்டும் துவக்கம்

கோவை, பிப்.12:  பேரூர் படித்துறை அருகேயுள்ள தரை பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் கட்டும் பணிகள் மீண்டும் துவங்கியுள்ளது. கோவை பேரூர் அருகேயுள்ள படித்துறையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே பழமையான தரைப்பாலம் இருந்தது. நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது தரைப்பாலத்தை கடந்து தண்ணீர் செல்லும். இதனால், பேரூரில் இருந்து வேடப்பட்டிக்கு செல்ல சுமார் 10 கிலோ மீட்டர் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து தரைப்பாலத்திற்கு பதிலாக உயர்மட்ட பாலம் கட்ட கோரிக்கை விடுகப்பட்டது.

அதன்படி, கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு பாலம் கட்டும் பணிகள் துவங்கப்பட்டது. இதன் அருகில் வாகனங்கள் செல்லும் வகையில் தற்காலிக தரைப்பாலம் ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு பருவமழையின்போது நொய்யல் ஆற்றில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து 5 மாதங்களுக்கு மேல் ஆற்றில் தண்ணீர் சென்றது.

இதனால் தற்காலிக தரைப்பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. மேலும், தொடர் மழை மற்றும் ஆற்றில் தண்ணீர் வரத்து இருந்ததை தொடர்ந்து உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ள நிலையில், மீண்டும் பேரூர் ஆற்றில் பாலம் கட்டும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இப்பணிகளை அடுத்த பருவமழைக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : bridge ,Perur ,river ,
× RELATED 3 மாதங்களுக்கு முன் வெள்ளத்தில்...