ஈரோடு, பிப். 12: ஈரோடு ஜவுளி சந்தையில் கோடைகால ஜவுளி ரகங்கள் விற்பனை இந்த வாரம் முதல் தொடங்கி உள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். ஈரோடு ஜவுளி சந்தை வாரந்தோறும் செவ்வாய்கிழமை நடந்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மொத்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஜவுளிகளை கொள்முதல் செய்கின்றனர். புத்தாண்டு, பொங்கல் பண்டிகை சீசன் விற்பனை முடிந்து கடந்த 3 வாரங்களாக மந்த நிலையில் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த வாரம் முதல் கோடை கால ஜவுளி ரகங்கள் விற்பனை தொடங்கி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மொத்த விற்பனை குறைந்த போதிலும் சில்லரை விற்பனை வழக்கம் போல நடைபெற்றதாக ஜவுளி வியாபாரிகள் கூறினர்.
இது குறித்து ஈரோடு ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறியதாவது: இந்த வாரம் முதல் சம்மர் சேல்ஸ் தொடங்கி உள்ளது. காட்டன் ரகங்கள் அதிக அளவில் விற்பனையாகி உள்ளது. காட்டன் பிராக், பனியன், காட்டன் சேலைகள், வேட்டி, காட்டன் சுடிதார், துண்டுகள், கைக்குட்டை உள்ளிட்டவைகள் சில்லரை விற்பனையில் அதிக அளவில் விற்பனையாகி உள்ளது. மொத்த வியாபாரம் சுமாராக இருந்த போதிலும் சில்லரை வியாபாரம் எதிர்பார்த்த அளவுக்கு நடந்துள்ளது. உள்ளூர் கோயில் திருவிழாக்கள் வர உள்ளதால் 3 மாதங்களுக்கு கோடைகால விற்பனை சீசன் நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு கூறினர்.