×

அரசு நிலம், நீர்வழி தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

சென்னை ராமாபுரம் பகுதியில் இருந்த சாலையை கோயில் நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளதாகவும், அதை அகற்றி சாலையை மீட்க வேண்டும் எனவும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் நிர்வாகம் சாலையை ஆக்கிரமித்ததா, எப்போது இந்த ஆக்கிரமிப்பு கண்டறியப்பட்டது உள்ளிட்ட கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். அவற்றுக்கு அரசு தரப்பில் உரிய பதிலளிக்கவில்லை. இதையடுத்து நீதிபதிகள், அரசு நிலத்தை கோயில் நிர்வாகம் ஆக்கிரமித்திருந்தால் அதை அகற்ற வேண்டும். அந்த பகுதியை நேரில் ஆய்வு செய்து  சென்னை மாநகராட்சி ஆணையர் அறிக்கை அளிக்க வேண்டும். இந்த ஆய்வு குழுவில், மனுதாரர் பிரதிநிதியும், கோயில் நிர்வாக பிரதிநிதியும் இடம் பெற வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

இதேபோல், ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நீர் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசியல் காரணங்களுக்காக ஆக்கிரமிப்புகள் மீது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு நிலம் மற்றும் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற வேண்டும். இதில் பாரபட்சம் காட்ட கூடாது என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.

Tags : government ,land ,waterways ,
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்