வருசநாடு, பிப்.11: மயிலாடும்பாறை ஊராட்சி நிர்வாகத்தில் தலைவரின் கணவர் தலையிடுவதாக கவுன்சிலர்கள் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர். மயிலாடும்பாறை ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘‘ஊராட்சி மன்ற தலைவர் பார்வதியின் கணவர் அன்பில்சுந்தரம் ஊராட்சி நிர்வாகத்தில் அதிக அளவில் தலையீடு செய்து வருகிறார். மயிலாடும்பாறைக்கு வரும் நலத்திட்டங்கள் அனைத்திற்கும் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். செய்யப்படாத வேலைகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் என ஊராட்சி செயலரை தொடர்ந்து மிரட்டி வருகிறார். அவ்வாறு செய்ய மறுத்து 2 ஊராட்சி செயலர்களை ஒன்றிய ஆணையரிடம் மனு கொடுத்து வேறு ஊராட்சிக்கு இடமாற்றம் செய்துள்ளார். அனைத்திலும் லாப நோக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்துவதால் மயிலாடும்பாறை கிராமத்தில் எந்தவித வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை.
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவரின் கணவரின் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளதால் பொதுமக்கள் அலுவலகத்திற்கு வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்’’ என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக 9வது வார்டு உறுப்பினர் பாண்டியம்மாள் பரமானந்தம் கூறுகையில், ‘‘கடந்த ஒரு வருடமாக மயிலாடும்பாறை கிராமத்தில் குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட எந்தவித அடிப்படை தேவைகளுக்கும் ஊராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தவில்லை. மாறாக பணம் சம்பாதிப்பதை மட்டுமே வேலையாக செய்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து போராட்டம் நடத்தும் மனநிலையில் உள்ளனர். இது சம்பந்தமாக மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.