திருமயம், பிப். 11: அரிமளம் அருகே கால்நடை பாதுகாப்பு திட்ட முகாமில் கால்நடை, கோழிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அரிமளம் அருகே கைகுளான்வயல் ஊராட்சி கறையப்பட்டி கிராமத்தில் தமிழக முதல்வரின் சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்டம் மூலம் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமை கைகுளான்வயல் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி குமார் துவக்கி வைத்தார். ஊராட்சி துணைதலைவர் ரமேஷ் வரவேற்றார்.
கைக்குளான்வயல் ஊராட்சி உறுப்பினர்கள் ஈஸ்வரி சுப்ரமணியன், ரேவதி தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் அறந்தாங்கி கோட்ட உதவி இயக்குனர் தவமணி வழிகாட்டுதலின்படி கே.புதுப்பட்டி கால்நடை உதவி மருத்துவர் நிமலேசன், உதவியாளர் உலகநாதன் ஆகியோர் கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளித்தனர்.
முகாமில் 146 மாடு மற்றும் கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் சிகிச்சை, சினை பரிசோதனை, 220 ஆடுகளுக்கு குடற்புழு நீக்க சிகிச்சை, 165 கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பு மருந்து அளிக்கப்பட்டது. கால்நடைகளுக்கு ஏற்படும் மலட்டு தன்மைக்கு சிறப்பு சிகிச்சையாக தாது உப்பு கலவைகள் வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து சிறந்த முறையில் வளர்க்கப்பட்ட கலப்பின கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கைக்குளான்வயல் ஊராட்சி செயலாளர் சாத்தையா செய்திருந்தார். கே.புதுப்பட்டி கால்நடை உதவி மருத்துவர் நிமலேசன் நன்றி கூறினார்.