கரூர், பிப்.11: கரூர் ஜவஹர் பஜாரில் இருந்து ஈஸ்வரன் கோயிலுக்கு செல்லும் சாலையில் வாகனங்கள் நிறுத்தம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் இருந்து ஈஸ்வரன் கோயிலுக்கு செல்லும் வழியில் குறுகிய சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக கோயிலுக்கும், பஜாருக்கும் செல்லும் அனைத்து தரப்பினர்களும் சென்று வருகின்றனர். இந்நிலையில், இந்த குறுகிய சாலையில் அவ்வப்போது கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டுவிட்டு செல்வதால் மற்ற வாகனங்கள் இந்த சாலையில் எளிதாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி இந்த பகுதியில் நடைபெற்று வருவதால் மற்ற வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாத வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.