×

பிடிஓ அலுவலகத்துக்கு பூட்டு போட்டு கவுன்சிலர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம் தண்டராம்பட்டில் பரபரப்பு வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து

தண்டராம்பட்டு, பிப்.11: தண்டராம்பட்டு ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து, நேற்று பிடிஓ அலுவலகத்தில் பூட்டு போட்டு, ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் 16 பேரும், அதிமுக சார்பில் 12 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து 14 மாதங்கள் ஆகியும் இதுவரை ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படவில்லை. மேலும், ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான நிதியும் ஒதுக்கப்படாமல் உள்ளது. இதனால் ஒன்றிய கவுன்சிலர்கள், போதிய நிதியை ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயசுதா தலைமையில் தண்டராம்பட்டு ஒன்றிய கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, ஒன்றியத்துக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து, ஒவ்வொரு கவுன்சிலருக்கும் தலா ₹10 லட்சம் மதிப்பில் பணிகளை வழங்க வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், ஒன்றியத்தில் என்னென்ன பணிகள் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் எனவும் கவுன்சிலர்கள் எழுதி கொடுத்தனர்.

அப்போது, திட்ட இயக்குனர் இதுகுறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனை கண்டித்து நேற்று மதியம் 12 மணியளவில் பிடிஓ அலுவலகத்தில் ஒன்று திரண்ட ஒன்றிய கவுன்சிலர்கள் 28 பேரும் நுழைவு வாயில் கேட்டை இழுத்து பூட்டினர். தொடர்ந்து, பிடிஓ அலுவலகத்தில் இருந்த அலுவலர்களை வெளியே செல்லுமாறு கூறிவிட்டு, அலுவலக அறைகளுக்கு பூட்டு போட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த பிடிஓ(கிராம ஊராட்சி) அமிர்தராஜ் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஒன்றிய கவுன்சிலர்கள், ‘நிதி மற்றும் பணிகளை ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையை வழங்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம். அதுவரை இங்கிருந்து செல்ல மாட்டோம். இங்கேயே சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு படுத்துறங்க உள்ளோம்’ என ஆவேசமாக தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய கவுன்சிலர்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Councilors ,PDO ,office ,protests ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...