×

பள்ளிகொண்டா அடுத்த சின்னச்சேரியில் 5 வீட்டின் பூட்டை உடைத்து 26 சவரன், 1.80 லட்சம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

ஒடுகத்தூர், பிப்.11: பள்ளிகொண்டா அடுத்த சின்னச்சேரியில் அடுத்தடுத்து 5 வீட்டின் பூட்டை உடைத்து 26 சவரன், 4 கிலோ வெள்ளி பொருடகள் மற்றும் ₹1.80 லட்சம் ஆகியவற்றை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பள்ளிகொண்டா அடுத்த சின்னச்சேரியில் வசித்து வருபவர் தேவேந்திரன்(44). ராணுவ வீரர். இவர் தற்போது ஜம்முவில் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் விடுமுறையில் வந்தவர், 8ம் தேதி பணிக்கு சென்றார். இவரது மனைவி திவ்யா(28). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு ஆலங்காயம் அடுத்த படகுப்பம் கிராமத்தில் உள்ள தனது தாயாரின் வீட்டிற்கு சென்றார். மேலும், ராணுவ வீரரின் எதிர் வீட்டில் வசித்து வருபவர் பொன்பார்த்த சாரதி. இவர் கடந்த 7ம் தேதி குடும்பத்துடன் கோவைக்கு சுற்றுலா சென்றிருந்தார். பின்னர், நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 3 சவரன் தங்க நகை மற்றும் ₹1.32 லட்சம் பணம் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த சிலர் ராணுவ வீரரின் வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு திவ்யாவிற்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் அங்கு வந்த திவ்யா வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து 20 சவரன் தங்க நகை, 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ₹30 ஆயிரம் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்து அவர் பள்ளிகொண்டா காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து அதேபகுதியில் ஏழுமலை, சுப்பிரமணி ஆகியோர் வீட்டில் தலா ஒரு சவரன் நகையும், ₹10 ஆயிரம் திருடு போகியுள்ளது. மேலும், அண்ணாமலை என்பவர் வீட்டில் ஒரு சவரன் நகை மற்றும் ₹8 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிந்து ஒரே நாளில் 5 வீடுகளில் 26 சரவன் நகை, 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ₹1.80 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் கடந்த 8ம் தேதி காளப்புதூரில் அடுத்தடுத்த 2 வீடுகளில் 6 சவரன் நகை, ₹35 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அதே பகுதியில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி செல்லும் சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Chinnacheri 5 ,Pallikonda ,house ,persons ,
× RELATED மினி லாரி மோதி உடைந்த மின்கம்பம் பள்ளிகொண்டா துளசி நகரில்