தக்கலை, பிப். 9: கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ் இலக்கியத்தோடு தொடர்புடைய சுமார் 400 ஆண்டு பழமை மிக்க மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் தக்கலை அஞ்சுவன்ன பீரப்பா தர்கா செயல்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு இந்த நிர்வாகம் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் வந்தது. இந்த நிலையில் மீண்டும் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் மூலம் கடந்த நவம்பர் மாதம் 27ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு 30ம் தேதி தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் போட்டியின்றி அஞ்சுவன்ன ஜமா அத் தை சேர்ந்த 15 நிர்வாக குழுவினர் தேர்வு செய்யப்பட்டதாக வக்பு வாரிய அதிகாரிகளால் டிசம்பர் 2ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வக்பு வாரியத்தின் நேரடி நிர்வாகத்தில் ஜமா அத் இருந்த காலத்தில் சுமார் மூன்றாண்டுகளுக்குரிய சுமார் ரூ. ஒரு கோடி நிதிக்குரிய வரவு செலவுகள் புதிதாக வக்பு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகத்திடம் இதுவரை ஒப்படைக்க வில்லை என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் கூறியதாவது: பல லட்ச ரூபாய் முறைகேடுகளை மறைக்க ஆளும் கட்சி பிரமுகரான தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர் ஒருவர் வக்பு வாரிய அதிகாரிகளுடன் இச்செயலில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆண்டு பீர்முகமது அப்பா ஆண்டு பெருவிழாவும் நெருங்கி விட்டது. 13ம் தேதி கொடியேற்றப்பட உள்ளது.
இந்நிலையில் முறைகேடுகளை மூடி மறைக்க ஆண்டு பெருவிழாவை நடத்த விடாமல் முட்டுக்கட்டை போட தர்கா தொடர்பான அனைத்து ஆவண கோப்புகள், முகவரிகள், கடித பரிமாற்றம் தொடர்பான கோப்புகள், விழா காலத்தில் வைக்கப்படும் சிறப்பு உண்டியல்கள், ஞானப்புகழ்ச்சி பாடல் புத்தகங்கள், குத்து விளக்குகள் அனைத்தையும் வக்பு வாரிய அலுவலக கட்டிடத்தில் பூட்டி வைத்து விட்டு புது நிர்வாகத்திடம் ஒப்படைக்க மறுக்கின்றனர்.
கோடிகணக்கான ரூபாய் முறைகேட்டில் தன்னையும் தன்னுடன் இருந்த அதிகாரிகளை காப்பாற்றும் முயற்சியில் வக்பு உறுப்பினர் ஒருவர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார். எனினும் திட்டமிட்டபடி தர்கா ஆண்டு பெருவிழா நடந்தே தீரும். தொடர்ந்து புதிய நிர்வாகத்திடம் வரவு செலவு கணக்குகளையும் பொருட்களையும் வக்பு அலுவலகத்தையும் ஒப்படைக்க வக்பு வாரிய அதிகாரிகள் முன் வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.