சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை : பிடிஐ செய்தி நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செய்தியாளரும், மூத்த பத்திரிகையாளருமான ராமசாமி மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பிடிஐ செய்தி நிறுவனத்தின் மூத்த செய்தியாளராகவும் முதன்மைச் செய்தியாளராகவும் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அவர், பிடிஐ ராமசாமி என்றே அழைக்கப்படும் அளவிற்கு தமிழ்நாட்டில் பிடிஐ நிறுவனத்தின் அடையாளமாகவே மாறிப்போனார்.
கலைஞர் உள்ளிட்ட தமிழ்நாட்டு முதலமைச்சர்களுடன் நெருக்கமாகப் பழகியவர் அவர். அவரது மறைவு என்பது ஊடகத்துறைக்குப் பேரிழப்பாகும். அன்னாரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், ஊடகத் துறையைச் சேர்ந்த நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
