×

திருமண சீர்வரிசை கொண்டு வந்தவர் பலி

கன்னியாகுமரி, பிப்.10: கன்னியாகுமரி அருகே டெம்போவில் இருந்து விழுந்து வாலிபர் உயிரிழந்தார். திருவனந்தபுரம் மணக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (32). இவரது மாமா பொன்னையன். இவர் தக்கலை புலியூர்குறிச்சியில் வசித்து வருகிறார். இவரின் மகள் பிந்து (22) என்பவருக்கும், கன்னியாகுமரி சுனாமி காலனியை சேர்ந்த ஆண்டனி (32) என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமண மறுவீடு நிகழ்ச்சிக்காக மணமக்கள் மற்றும் பெண் வீட்டார் உறவினர்கள் கன்னியாகுமரிக்கு டெம்போவில் சீர்வரிசை ெபாருட்கள் கொண்டு வந்து இருந்தனர். ராஜேசும் இவர்களுடன் வந்து இருந்தார். விருந்து நிகழ்ச்சி முடிந்து பெண் வீட்டு உறவினர்கள் அனைவரும் டெம்போவில், நேற்று இரவு 10.30 மணியளவில் தக்கலைக்கு புறப்பட்டனர். இதில் 25 பேர் இருந்துள்ளனர்.

போதையில் இருந்த ராஜேஷ், டெம்போவின் பின்புற பகுதியில் அமராமல், இடதுபுறம் நின்று கொண்டு இருந்துள்ளார். கன்னியாகுமரி பெருமாள்புரம் இசக்கியம்மன் கோயில் அருகில் வரும் போது நிலை தடுமாறி, டெம்போவில் இருந்து ராஜேஷ் கீழே விழுந்தார். இதில் டெம்போவின் அடிபகுதியில் விழுந்தவர் மீது, டெம்போவின் பின் சக்கரம் ஏறி நசுக்கியது. படுகாயம் அடைந்த அவரை, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  டாக்டர்கள் பரிசோதனையில் ராஜேஷ் இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  கன்னியாகுமரி போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...