×

நள்ளிரவில் குழந்தைகள் வார்டில் புகுந்த 2 வாலிபர்கள் குழந்தை திருட வந்ததாக பரபரப்பு செய்யாறு அரசு மருத்துவமனையில்

செய்யாறு, பிப்.10: செய்யாறு அரசு மருத்துவமனை குழந்தைகள் வார்டில் நள்ளிரவில் 2 வாலிபர்கள் திடீரென புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை உள்ளது. நேற்று அதிகாலை 2 மணியளவில் 3வது மாடியில் உள்ள குழந்தைகள் சிறப்பு வார்டில் மர்ம ஆசாமிகள் 2 பேர் திடீரென புகுந்தனர். அப்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் பெற்றோர் இதனை கவனித்தனர். அந்த நபர்களை குழந்தை திருடர்கள் என நினைத்து கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அருகில் உள்ள மற்ற வார்டுகளில் இருந்த பொதுமக்கள் அவர்கள் 2 பேரையும் மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து, மருத்துவமனையில் பணியில் இருந்த நர்ஸ் பிரியா உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், அங்கு விரைந்து வந்த செய்யாறு போலீசார் அவர்கள் 2 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

தொடர்ந்து குழந்தை திருட வந்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். இதில், அந்த நபர்கள் செய்யாறு அடுத்த கீழ்புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த உதயா(30), மனோகர்(40) என்பதும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த உறவினரை பார்க்க வந்ததும், குடிபோதையில் தெரியாமல் குழந்தைகள் வார்டுக்குள் புகுந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை காவல் நிலையத்திலேயே வைத்திருந்த போலீசார், எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் குழந்தைகள் வார்டில் புகுந்த நபர்களால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : teenagers ,children ,government hospital ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...