×

கலெக்டர், பிடிஓ அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் மாற்றுத்திறனாளிகள் கைது உதவித்தொகையை உயர்த்தக்கோரி

திருவண்ணாமலை, பிப்.10: மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி கலெக்டர், பிடிஓ அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், மாநிலம் தழுவிய அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நேற்று நடந்தது. அதன்படி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு, மாவட்ட பொருளாளர் சத்யா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சாரவள்ளி, சத்திவேல், ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ₹3 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதேபோல், தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும். குறைந்தபட்சம் 30 சதவீதம் முதல் அதிகபட்சம் 70 சதவீதம் வரை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ₹3 ஆயிரமும், அதற்கு அதிகமான பாதிப்புள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ₹5 ஆயிரமும் மாதாந்தோறும் வழங்க வேணடும். தனியார் துறை வேலைவாய்ப்புகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கான சிறப்பு தனி சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, கலெக்டர் அலுவலகத்துக்குள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகளை, அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் தடுத்து நிறுத்தினர். எனவே, அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அதைத்தொடர்ந்து, போராட்டத்தை கைவிடக்கோரி போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, போராட்டத்தில் ஈடுபட்ட 205 மாற்றுத்திறனாளிகளை கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். அதேபோல், ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 138 பேரை போலீசார் கைது செய்தனர். கீழ்பென்னாத்தூர் பிடிஓ அலுவலகம் முன்பு மாநில துணைத்தலைவர் சண்முகம் தலைமையிலும், செங்கம் பிடிஓ அலுவலகம் முன்பும் நேற்று மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், பிடிஓ அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags : Immigration protest ,PDO offices ,Collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...