சென்னை : கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வள துறைக்கு 12.38 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரில் மீன் வளர்ப்பு மையம் உள்பட 12 கோடியே 38 லட்சத்து 50 ஆயிரம் செலவிலான கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வள துறை கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் 2019-20ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவு தொகையான 1 கோடியே 40 லட்சத்து 64 ஆயிரத்து 222 ரூபாய்க்கான வங்கி வரைவோலையை முதல்வரிடம் அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயக்குமார், உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜி, தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், கால்நடை துறை செயலாளர் கோபால், இயக்குநர் ஞானசேகரன், ஆவின் மேலாண்மை இயக்குநர் நந்தகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.