திருப்பூர், பிப்.10:திருப்பூர் - காங்கயம் ரோடு பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் தண்ணீர் வீணாகும் இடத்தில் துணி துவைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 45வது வார்டு காங்கயம் ரோடு வெங்கடேஸ்வரா நகர் பிரிவில் சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ரோட்டில் வீணாகி வருகிறது. இது குறித்து அப்பகுதியின் மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை தகவல் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் நேற்று அப்பகுதி திமுகவினர் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகும் இடத்தில் குளித்தும், துணிகளை துவைத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.