×

சத்துணவு பணியாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்

தர்மபுரி, பிப்.10: சத்துணவு பணியாளர்கள் சங்கத்தின், தர்மபுரி மாவட்ட பொதுகுழு கூட்டம், காரிமங்கலம் கிழக்கு தொடக்கப்பள்ளியில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார். மறைந்த மாவட்ட செயலாளர் கந்தசாமிக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி, இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில துணைத்தலைவர் செங்குட்டுவன் தலைமையில், புதிய நிர்வாகிகளாக கணேசன் மாவட்ட தலைவராகவும், அண்ணாதுரை செயலாளராகவும், கலா பொருளாளராகவும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

இதில், வரும் 27ம் தேதி கூட்டமைப்பின் சார்பாக சென்னையில் ராஜா அண்ணாமலை மன்றத்தில், தமிழக முதல்வர் கலந்து கொள்ளும் நன்றி அறிவிப்பு மாநாட்டிற்கு, 15 பஸ்களில் திரளாக செல்ல வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்களுக்கு, 3 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள  பொது வருங்கால வைப்பு நிதி, பென்ஷன் நிலுவை தொகை ஆகியவற்றை உடனே வழங்க, கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பொருளாளர் கலா நன்றி கூறினார்.

Tags : Meeting ,Nutrition Employees Union Administrators ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...