திருவாரூர், பிப்.10: கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருவாரூரில் தலைவர் முருகையன் தலைமையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட செயலாளர் பாண்டியன் மற்றும் பொறுப்பாளர்கள் குணசேகரன், சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் அடிப்படை மாத ஊதியமாக கிராம உதவியாளர்களுக்கு ரூ.15,700 வழங்கிட வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.7,850 வழங்கிட வேண்டும். மாநிலம் முழுவதும் இருந்து வரும் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.'