நீடாமங்கலம், பிப்.10: நீடாமங்கலம் அருகே சலிப்பேரி கிராமத்தில் புதிய நெல் ரகம் ஏ.டீ.டி. 54 ரகத்தின் வயல் தின விழா நடந்தது. வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன் தலைமையில் சலிப்பேரி கிராமத்தில் நடந்த ஏ.டீ.டி. 54 என்ற புதிய மத்திய கால நெல் ரகத்தின் வயல் விழாவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்ரமணியன் பேசுகையில், புதிய நெல் ரகத்தை திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு வட்டாரங்களில் அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இந்த ரகம் பின் சம்பா மற்றும் தாளடி பருவத்தில் சாகுபடி செய்வதற்கு ஏற்றதாகும். 130-135 நாட்கள் வயதுடைய மத்திய கால ரகமாகும். சாயாத தன்மை உடையது. இலை மடக்குப் புழுஎதிர்ப்பு திறன் கொண்டது. குலைநோய் மற்றும் தண்டுதுளைப்பானுக்கு மிதமான எதிர்ப்புத்திறன் கொண்டது என்றார். தொடர்ந்து இந்த செயல்விளக்கத் திட்டத்தை பரவலாக்கம் செய்திருக்கும் சுற்றுச்சூழலியல் உதவி பேராசிரியர் செல்வமுருகன் பேசினார். அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் அனுராதா, ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை முன்னோடி விவசாயி சோமசுந்தரம் செய்திருந்தார்.