×

விழுப்புரத்தில் கத்திமுனையில் மிரட்டி நகை வியாபாரியிடம் 3 கிலோ தங்கம் பறிப்பு: சென்னை சென்றபோது வழிமறித்து கைவரிசை

விழுப்புரம்: விழுப்புரத்தில் பட்டப்பகலில் நகை மொத்த வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி 3 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதை பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(43). மொத்த தங்க நகை வியாபாரி. சென்னையில் மொத்தமாக தங்கம் வாங்கி வந்து நகைக் கடைகளுக்கு ஜிமிக்கி, கம்மல், செயின் போன்றவற்றை செய்து கொடுப்பார். இதற்காக வீட்டிலேயே நகை பட்டறையும் வைத்துள்ளார்.

நேற்றையதினம் 3 கிலோ தங்க கட்டிகளை உருக்கி ஜிமிக்கி, கம்மல் உள்ளிட்ட ஆபரணங்களை செய்து எடுத்து கொண்டு சென்னைக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்வதற்காக விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு பைக்கில் நேற்று காலை 10 மணியளவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பைக்கில் பின்தொடர்ந்து வந்த 5 பேர் கும்பல் கோட்டை விநாயகர் கோயில் அருகே வழிமறித்துள்ளது. முகமூடி அணிந்திருந்த 5 பேரும் ராஜமாணிக்கத்தை பைக்கை நிறுத்துமாறு கூறி கத்தியை காட்டி மிரட்டினர். அவர் பைக்கை நிறுத்தியதும் தங்கநகை பையை கொடுக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் ராஜமாணிக்கம் தரமறுத்ததால் அவரை வெட்டுவதற்கு சென்றுள்ளனர்.

உயிருக்கு பயந்து அவர்களிடம் பையை கொடுத்தபோது அதனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். கொள்ளைபோன நகைகளின் மதிப்பு ரூ.3 கோடி. இதுகுறித்து அவர் உடனடியாக விழுப்புரம் நகர காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். போலீசாரும், ஏஎஸ்பி ரவீந்திரகுமார்குப்தால், எஸ்பி சாய்பிரனீத் ஆகியோரும் கொள்ளை நடந்த இடத்தில் விசாரணை நடத்தினர். ராஜமாணிக்கத்திடம் போலீசார் நடத்திய விசாரணையில் சென்னையில் மொத்தமாக தங்க கட்டிகளை வாங்கிவந்து நகைகளாக செய்து கொண்டு செல்வதை நோட்டமிட்ட கும்பலே கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. கொள்ளையரை பிடிக்க 13 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு தேடுதல் வேட்டையில் களமிறங்கியுள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Villupuram ,Rajamanickam ,Villupuram Virattikuppam Path ,
× RELATED ஏற்கனவே 3 மனைவி போச்சு…...