×

சூறைக்காற்றால் கடல் சீற்றம் கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து

கன்னியாகுமரி, பிப். 9: கன்னியாகுமரியில் சூறைக்காற்று காரணமாக நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால்  பூம்புகார் படகு சேவை ரத்து செய்யப்பட்டது. சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கு தினமும் ஏராளமான மக்கள் வருகின்றனர். இவர்களின் வசதிக்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் 3 படகுகளை இயக்கி வருகிறது.

கன்னியாகுமரியில் அடிக்கடி ஏற்படும் கடல் சீற்றம் மற்றும் திடீரென ஏற்படும் நீர்மட்ட குறைவு காரணமாக படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் கன்னியாகுமரியில் சூறைக்காற்று வீசி வருவதோடு, கடல் சற்று சீற்றத்துடன் காணப்பட்டது. இதையடுத்து நேற்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆர்வத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சூறைக்காற்று குறைந்து நிலைமை சீரானதும் படகு போக்குவரத்து தொடங்கும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்திருந்தது. எனினும் மாலை வரை அதே நிலை நீடித்ததால் நேற்று முழுவதும் படகுசேவை ரத்து செய்யப்பட்டது.

Tags : Kanyakumari ,
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...