திருச்சி, பிப். 9: திருச்சி கல்லுக்குழி நாயக்கர் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (43). தஞ்சையில் உள்ள தனியார் வங்கியில் லோன் பிரிவில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2016ல் புவனேஸ்வரி என்பவரை திருமணம் செய்தார். அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டார். பின்னர் திலகவதி என்பவரை 2வது திருமணம் செய்து, கருத்துவேறுபாட்டால் அவரையும் பிரிந்துவிட்டார். இந்நிலையில் 3வதாக திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அஞ்சல்காரன்தோப்பை சேர்ந்த சித்ரா (40) என்பவரை திருமணம் செய்தார். நாகராஜ் முதல் திருமணம் மட்டும் சித்ராவிடம் தெரிவித்துவிட்டு 2வது திருமணம் மறைத்துவிட்டார். இது தற்போது சித்ராவுக்கு தெரியவந்ததால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சித்ராவை நாகராஜ் மிரட்டி ஆபாசமாக பேசி, கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது. 2வது திருமணத்தை மறைத்து தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததாக கூறி சித்ரா கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். எஸ்ஐ இந்திராகாந்தி வழக்கு பதிந்து நாகராஜை கைது செய்து சிறையிலடைத்தார்.