புதுக்கோட்டை, பிப்.9: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கரும்பிரான்கோட்டையைச் சேர்ந்த வெற்றிசெல்வம் (45) என்பவர் ஆலங்குடியில் உள்ள கறிக்கடைக்கு கறிவாங்க சென்றுள்ளார். அப்போது ரகுமான்(23) என்பவருக்கும் மற்றொருவருக்கும் கறிக்கடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது ரகுமான் அங்கு நின்றுகொண்டு இருந்த வெற்றிசெல்வம் மீது மோதியுள்ளார். ஏன் இப்படி என் மேல் விழுந்தீர்கள் என்று ரகுமானை பார்த்து வெற்றிச்செல்வம் கேட்க இதில் ஆத்திரமடைந்த ரகுமான் கோழி வெட்ட பயன்படும் கத்தியை எடுத்து வெற்றிசெல்வம் முதுகில் வெட்டிவிட்டு தப்பியுள்ளார். இதனை அடுத்து காயமடைந்த வெற்றி செல்வத்தை மீட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே வெட்டுகாயம் அடைந்த வெற்றிசெல்வத்தின் உறவினர்கள் ஆலங்குடியில் சாலை மறியல் செய்ய தொடங்கினர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குடி எஸ்ஐ வேலுசாமி தலமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் சிறிது நேரத்தில் கைவிடப்பட்டது. இதனிடையே சிலர் வெற்றிச்செல்வத்தை அரிவாளால் வெட்டிய ரகுமானை பிடித்து தாக்கியுள்ளனர். ஆலங்குடி புதுக்கோட்டை சாலையில் காயத்துடன் கிடந்தவரை போலீசார் மீட்டு, புதுக்கோட்டை மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து போலீஸ்சார் விசாரித்து வருகின்றனர்.