ஊட்டி,பிப்.9: கோத்தகிரி கொடநாடு கொலை வழக்கு விசாரணை வரும் 16ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது. இவ்வழக்கில் தொடர்புடையதாக சயான், சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார், வாளையார் மனோஜ், மனோஜ் சமி, ஜித்தீன் ஜாய், ஜம்சீர் அலி, மற்றும் பிஜின் குட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அரசு தரப்பு சாட்சி விசாரணை நிறைவடைந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் முக்கிய சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது.
முதல் மூன்று சாட்சிகளிடம் ஏற்கனவே குறுக்கு விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது. இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறையில் உள்ள சயான், வளையார் மனோஜ் மற்றும் ஜாமீனில் உள்ள 3 பேர் ஆஜராகினர். கொலை சம்பவத்தின் போது படுகாயமடைந்த கிருஷ்ணபகதூர் உள்ளிட்டோரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் பணியை மேற்கொண்ட எஸ்டேட் ஓட்டுநர் யோகநாதனிடம் குறுக்கு விசாரணை நடந்தது. விசாரணைக்கு பின் வழக்கை வரும் 16ம் தேதிக்கு நீதிபதி அருணாசலம் ஒத்தி வைத்தார்.