×

வயிற்றில் உதைத்ததால் கருச்சிதைவு நிலத்தகராறில் கர்ப்பிணியை தாக்கிய விவசாயி கைது மேலும் 3 பேருக்கு வலை

வேட்டவலம், பிப்.9: வேட்டவலம் அருகே நிலத்தகராறில் கர்ப்பிணி மற்றும் அவரது மாமனாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த விவசாயியை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் தாலுகா வீரபாண்டி கிராமத்தை சேர்ந்தவர் தர்மதுரை. இவரது மனைவி விமலா(26). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது. தற்போது விமலா கர்ப்பிணியாக இருந்தாராம். இவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த மதுராம்பட்டு கிராமத்தில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. தர்மதுரை குடும்பத்தினருக்கும், மதுராம்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி சங்கர்(38) குடும்பத்தினருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 6ம் தேதி விமலா, தனது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சங்கர், அவரது சகோதரர்கள் ஏழுமலை, முருகன், உறவினர் துரை ஆகியோர், முன்விரோதம் காரணமாக விமலாவிடம் தகராறு செய்தனர். பின்னர் விமலாவை, சங்கர் தலைமுடியை பிடித்து தாக்கி கீழே தள்ளினார். இதையடுத்து ஏழுமலை விமலாவின் வயிற்றில் எட்டி உதைத்தாரம். இதில் உடன் வந்தவர்கள் விமலாவை கைகளால் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதனை தடுக்க வந்த விமலாவின் மாமனார் பாலுவையும் சங்கர் உள்ளிட்ட தரப்பினர் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் இருவரையும் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த விமலா திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் வேட்டவலம் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதில், ஏழுமலை எட்டி உதைத்ததால் தனது கரு கலைந்துவிட்டதாக தெரிவித்தார். அதன்பேரில் எஸ்ஐ விஸ்வநாதன் வழக்குப்பதிவு செய்து, சங்கரை கைது செய்தார். மேலும், தலைமறைவாக உள்ள ஏழுமலை, முருகன், துரை ஆகியோரை தேடி வருகிறார்.

Tags :
× RELATED அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு...