×

ஓட்டப்பிடாரம் அருகே வாலிபர் கொலையில் தேடப்பட்டவர் கைது

ஓட்டப்பிடாரம், பிப். 9: ஓட்டப்பிடாரம் அருகே வாலிபர் கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது செய்யப்பட்டார். கடம்பூர் அருகே மும்மலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் முத்துமாரியப்பன் (38). இவருக்கும் அதே பகுதி மேல பாறைப்பட்டியைச்  சேர்ந்த அண்ணாதுரை மகன் ஹரிகிருஷ்ணன்(40) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் தட்டிக்கேட்ட ஹரிகிருஷ்ணனின் தந்தை அண்ணாதுரையை முத்துமாரியப்பன் மற்றும் சிலர் சேர்ந்து கொலை செய்தனர். இது தொடர்பான வழக்கில் கைதான முத்துமாரியப்பன் ஜாமீனில் வந்து, ஓட்டப்பிடாரம் அருகே வடக்கு ஆவரங்காடு கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். இதையறிந்த ஹரிகிருஷ்ணன் நேற்று முன்தினம் வடக்கு ஆவரங்காடு சென்று, முத்துமாரியப்பனிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த முத்துமாரியப்பன், ஹரிகிருஷ்ணனை மண்வெட்டியால் தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.

இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துமாரியப்பனை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், ‘ஹரிகிருஷ்ணனின் தந்தை கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த தன்னிடம் ஹரிகிருஷ்ணன் தகராறில் ஈடுபட்டார். எனவே, என்னை தற்காத்து கொள்வதற்காக அவரை மண்வெட்டியால் தாக்கினேன். இதில் அவர் இறந்தார்’ என தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு