×

புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தல பெருவிழாவில் சப்பர பவனி

ஓட்டப்பிடாரம், பிப்.9: புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தலப் பெருவிழாவில் நேற்று இரவு சப்பர பவனி நடந்தது.  பாளையங்கோட்டை மறை மாவட்டத்துக்கு உட்பட்ட புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தலப்பெருவிழா கடந்த 28ம் தேதி துவங்கியது. அன்று மாலை பாளை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் ஜெபமாலையுடன் திருவிழா கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு திருப்பலி இடம் பெற்று வருகிறது.  நேற்று (8ம் தேதி) காலை 6 மணிக்கு திண்டுக்கல் மறை மாவட்டம் ஆர்சி நகர் பங்குத்தந்தை மரிய இஞ்ஞாசி, பூண்டி மாதா திருத்தலம் துணை அதிபர் அல்போன்ஸ், குழித்துறை மறை மாவட்டம் மேல்பாலை பங்குத்தந்தை ஐசக், தூத்துக்குடி மறை மாவட்டம் கொம்பாடி பங்குத்தந்தை லாசர் தலைமையில் திருப்பலி நடந்தது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு பாளை மறைமாவட்ட முதன்மை குரு குழந்தைராஜ், பாளை கத்தோலிக்க ஆயர் இல்லம் சகாயஜான் ஆகியோர் தலைமையில் திருப்பலியும், முக்கிய நிகழ்வாக இரவு  8.30 மணிக்கு சப்பர பவனியும் நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.  

இன்று (9ம் தேதி)  காலை 11.30 மணிக்கு பாளை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் ஆண்டுப் பெருவிழா திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு சேர்ந்தமரம் பங்குத்தந்தை இம்மானுவேல் ஜெகன்ராஜா தலைமையில் திருப்பலி, நற்கருணை ஆசீர் நடக்கிறது.  10ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு அலவந்தான்குளம் பங்குத்தந்தை அந்தோணி வியாகப்பன் தலைமையில் நன்றி திருப்பலியும், மாலை 6 மணிக்கு கொடியிறக்கமும் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை திருப்பலியும், நற்கருணை ஆசீரும் நடக்கிறது. ஏற்பாடுகளை புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தல பங்குத்தந்தை மரியபிரான்சிஸ், ஆன்மீக தந்தை சகாயதாசன், உதவி பங்குத்தந்தை அல்போன்ஸ் பவுல்ராஜ், அருட்சகோதரிகள் உள்ளிட்ட திருத்தல மக்கள் செய்து வருகின்றனர்.

Tags : Sappara Bhavani ,St. Anthony's Correctional Festival ,
× RELATED பாளை சவேரியார் பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது