×

பூமிதானமாக வழங்கிய நிலம் மோசடியாக பட்டா மாறுதல்

தேனி, பிப். 9: ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரத்தைச் சேர்ந்தவர் குருசாமி மகன் சுப்புராஜ். இவர் தேனியில் கலெக்டர் பல்லவி பல்தேவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது தந்தை குருசாமி சுதந்திரப் போராட்ட தியாகி. இவர் கடந்த 1965ல் திம்மநாயக்கனூரில் உள்ள எங்கள் கூட்டுக் குடும்பத்திற்கு பாத்தியப்பட்ட இடத்தில் எனது தந்தையாருக்கு சொந்தமான 45 சென்ட் நிலத்தை, நிலமில்லா பட்டியலின சமூகத்திற்காக பூமிதான இயக்கத்தின் கீழ் தானமாகப் பத்திரப் பதிவு செய்தார். இந்த பூமி தான நிலத்தை மோசடியாக பட்டா மாறுதல் செய்து, வேறொரு நபருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை ரத்து செய்யக்கோரி கடந்த 10 ஆண்டுகளாக போராடி வருகிறேன். பெரியகுளம் கோட்டாட்சியர் நிலத்தை ஆய்வு செய்து, கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக மாவட்ட வருவாய் அலுவலருக்கு அறிக்கை அனுப்பிவிட்டார். ஆனால், மாவட்ட வருவாய்த்துறை மோசடியாக வழங்கிய பட்டா மாறுதல் ரத்து செய்யாமல் உள்ளது. எனவே, விரைவில் மாவட்ட நிர்வாகம் முறைகேடாக வழங்கியுள்ள பட்டாவை ரத்து செய்து, பூமிதான இயக்கத்திற்கு வழங்கப்பட்ட நிலத்தை, நிலமற்றபட்டியலின ஏழைகளுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : land ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!