சிவகங்கை, பிப்.9: தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர், அரசு ஊழியர்கள் வாக்களிக்கும் வகையில் சிறப்பு வாக்களிக்கும் மையம் அமைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் சேது செல்வம் விடுத்துள்ள அறிக்கையில்: தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கான அஞ்சல் வாக்கு முறையில் ஏராளமான குழப்பங்கள் உள்ளது. அஞ்சல் வாக்குகள் சரியான முறையில் வழங்கப்படுவதில்லை. வாக்களிக்கும் காலத்தில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் கையொப்பம் பெறுவதில் சிரமம் உள்ளது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் 4லட்சத்து 35ஆயிரம் ஆசிரியர், அரசு ஊழியர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் 3லட்சத்து 19ஆயிரத்து 291பேருக்கு மட்டுமே அஞ்சல் வாக்கு வழங்கப்பட்டது. இதில் 24ஆயிரத்து 912பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டது. எனவே 2012 சட்டமன்ற தேர்தலில் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர், அரசு ஊழியர்கள் வாக்களிக்கும் வகையில் சிறப்பு வாக்களிக்கும் மையம் அமைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு அவர்கள் தங்கும் இடங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் பணிக்கான உழைப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.