பூந்தமல்லி: திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். போரூரில் பிரசாரத்தை தொடங்கியவர் திருவேற்காடு, காடுவெட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பபிரிவு நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் கலந்துகொண்டார். இந்நிலையில், முதல்வர் நிகழ்ச்சி நடந்த கல்லூரிக்கு அருகே உள்ள குடியிருப்புகள் சிலவற்றை அகற்ற வருவாய்த்துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 40க்கும் மேற்பட்டோர் திடீரென குழந்தைகளுடன் குடும்பத்தோடு முதல்வர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருந்த கல்லூரி அருகே ஆர்ப்பாட்டம் செய்தவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அதிகாரிகளையும், அரசையும் கண்டித்தும், பட்டா வழங்க கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். முதல்வர் அங்கு வருவதற்கு சிறிதுநேரம் நடந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கலைத்தனர்.