ஆரணி, பிப்.8: ஆரணி அருகே பொன்னெழில் நாதர் கோயிலில் சுவாமி மீது சூரிய ஒளி பிரகாசிக்கும் நிகழ்வு நேற்று நடந்தது. இதனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆரணி அடுத்த இரும்பேடு அருகே உள்ள பூண்டியில் பழமை வாய்ந்த பொன்னெழில் நாதர் ஜெயினர் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று பார்சுவநாதருக்கு ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. அப்போது, கோயிலில் உள்ள சுவாமி மீது சூரிய ஒளி பிரகாசிக்கும் அரிய நிகழ்வு நடந்தது. சுமார் 5 நிமிடம் சூரிய ஒளி பிரகாசித்தது. இதனை ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து கோயிலுக்கு வந்திருந்த ஏராளமான ஜெயின பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல், கடந்த 3 தினங்களுக்கு முன்பு சுவாமி மீது சூரிய ஒளி பிரகாசித்தது குறிப்பிடத்தக்கது.