×

சிதம்பரம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 2 மீனவர்கள் பரிதாப பலி

சிதம்பரம், பிப். 8: சிதம்பரம் அருகே படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி 2 மீனவர்கள் பலியானார்கள். அவர்களின் உடல்களை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள எம்ஜிஆர் திட்டு கிராமத்தை சேர்ந்த வீரத்தமிழன் (50), தமிழன் (52), குணசேகரன் (60), அப்பு (40) ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் மாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று அதிகாலை அவர்கள் மீன்பிடித்து கொண்டு திரும்பி வரும் போது கடலோர முகத்துவார பகுதியில் எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்தது. இதனால் கடலில் விழுந்த 4 பேரும் உயிருக்கு போராடினர். இவர்களில் குணசேகரன், அப்பு ஆகிய 2 பேரும் நீந்தி கரை சேர்ந்தனர். வீரத்தமிழன், தமிழன் ஆகிய 2 பேரும் கடலில் மூழ்கி மாயமாகினர். இதையடுத்து அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்தது.

இதற்கிடையே நேற்று காலை வீரத்தமிழன் (50), தமிழன் (52) ஆகிய 2 பேரின் உடல்களும் நடுமுடசல் ஓடை என்ற இடத்தில் கரை ஒதுங்கியது. இதையடுத்து கிள்ளை போலீசார் மீனவர்கள் உதவியுடன் உடல்களை மீட்டு படகில் கரைக்கு எடுத்து வந்தனர். பிரேத பரிசோதனைக்காக 2 பேரின் உடல்களும் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படகு கவிழ்ந்து பலியான மீனவர்கள் வீரத்தமிழன், தமிழன் ஆகியோரின் உடல்களை பார்த்து அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இச்சம்பவம் எம்ஜிஆர் திட்டு மற்றும் மீனவர் கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : fishermen ,Chidambaram ,
× RELATED இலங்கை சிறையிலிருந்து...