×

குளத்தூர்- முள்ளூர் சாலையோரத்தில் தடுப்பு சுவரில்லாத கிணறால் விபத்து அபாயம்

குளத்தூர், பிப். 5:  குளத்தூர் -முள்ளூர் வழிச்சாலையோரம்  உள்ள தடுப்பு சுவரில்லாத கிணறால் விபத்து அபாயம் நிலவுகிறது. இப்பகுதியில் உள்ள விளை நிலங்களுக்கு இவ்வழியாக பொருட்களை கொண்டு செல்ல வாகன ஓட்டுநர்கள் வர மறுக்கின்றனர். இக்கிணறு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு விவசாயிகள் பலமுறை தெரிவித்தும், இதுவரை இக்கிணற்றை மூட எந்தவித நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘‘குளத்தூர்- முள்ளூர் வழிச்சாலையின் ஓரம் உள்ள இக்கிணறு வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியதோடு ஆபத்தான கிணறாக காட்சியளிக்கிறது.

இச்சாலையின் இருபுறமும் விவசாய நிலங்கள் உள்ளதால் இப்பகுதி முழுவதும் தற்போது விவசாயப் பணிகளுக்கான பொருட்கள் மற்றும் வேலை ஆட்கள் வாகனங்களில் அழைத்து செல்வதில் பெரும் சிரமமாக உள்ளது. தற்போது சாலையில் பாதிக்குமேல் கிணற்று பள்ளம் ஆக்கிரமித்துள்ளதால் இருசக்கர வாகனங்களைத் தவிர லோடு ஆட்டோ மற்றும் மினிவேன்கள் செல்ல முடிவதில்லை. இக்கிணற்றினால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளாகுவதோடு  விபத்து அபாயமும் நிலவுகிறது. மேலும் விவசாயப் பணிகளுக்கு பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விஷயத்தில் தலையிட்டு விபத்து அபாயம் நிலவும் இந்த தடுப்பு சுவரில்லாத  கிணறை மூடுவதோடு சாலையை சீரமைக்கவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு, என்றனர்.

Tags : Kulathur-Mullur ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு