×

மதுரையில் நாளை பிரமாண்டமாக நடைபெற உள்ளது; திமுக பாக முகவர்கள் மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

மதுரை: மதுரையில் நாளை தென்மண்டல திமுக பாக முகவர்கள் மாநாடு பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். முன்னதாக கோரிப்பாளையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பாலம், வண்டியூர் கண்மாய் பூங்கா திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் நாளை மாலை தென்மண்டல திமுக பாக முகவர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (பிப். 21) காலை 10.30 மணிக்கு விமானத்தில் மதுரை வருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் கட்சியினர், தொண்டர்கள், பொதுமக்கள் சிறப்பு வரவேற்பு அளிக்கின்றனர். காலை 11 மணிக்கு மதுரை வடபழஞ்சி எல்காட் தொழில்நுட்ப பூங்காவில் திறன் மேம்பாட்டு மையத்தை திறந்து வைக்கிறார். பகல் 12.15 மணிக்கு நெடுஞ்சாலைத் துறை சார்பில் மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் புதிதாக கட்டப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மேம்பாலத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து பகல் 12.30 மணிக்கு மீனாட்சி அரசு கலைக் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து பகல் ஒரு மணிக்கு மதுரை கே.கே.நகரில், புனரமைக்கப்பட்ட வண்டியூர் கண்மாய் பூங்காவை திறந்து வைக்கிறார். இங்கிருந்தபடி சிவகங்கையில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் திருவுருவச்சிலையை திறந்து வைக்கிறார். 3,867 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலக கட்டிடம், மதுரை அங்கூரான் அறிவியல் மையம் ஆகியவற்றையும் திறந்து வைக்கிறார்.

பகல் 1.30 மணிக்கு அரசு விருந்தினர் மாளிகை திரும்பும் அவர், சிறிது ஓய்வுக்கு பிறகு, மாலை 5 மணிக்கு மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் தென்மண்டல திமுக பாக முகவர்கள் மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இரவு 7 மணிக்கு மதுரை காந்தி மியூசியத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலமைச்சர், இரவு 7.30 மணிக்கு மதுரை விமான நிலையம் சென்று, அங்கிருந்து விமானத்தில் சென்னை திரும்புகிறார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு மதுரையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Tags : Madura ,Dimuka Baga Agents' Conference ,Chief Minister ,K. Stalin ,Madurai ,South ,Zone ,Divka Bhagha ,Agents ,Mu. K. Stalin ,Netaji Subhash Chandrabos Bridge ,Vandiyur Kanmai Park ,Netaji Subhash Chandra Bose Bridge ,
× RELATED 2026ல் காலியாகும் 71 எம்பி பதவிகளில் 40...