நெல்லை, பிப். 5: நெல்லை அரசு அருங்காட்சியகத்தில், மண்டல கலை பண்பாட்டுத் துறை சார்பில் ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சி, கடந்த 2ம் தேதி முதல் 3 நாட்கள் நடந்தது. இதில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களை சேர்ந்த பிரபல ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்கள் தங்கள் படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர். ஏராளமான பொதுமக்கள், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். மண்பாண்ட பயிற்சியும் அளிக்கப்பட்டது. கண்காட்சி நிறைவு விழா, நேற்று மாலை நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு பங்கேற்று ஓவியக் கண்காட்சியை பார்வையிட்டு படைப்பாளிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். சென்னை ஓவியக்கல்லூரி முன்னாள் முதல்வர் சந்துரு முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி செய்திருந்தார்.