கோவை, பிப்.5: கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகே காமராஜர் ரோட்டில் கடந்த 2ம் தேதி இந்து முன்னணி சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் சிங்காநல்லூர் பகுதி இந்து முன்னணி செயலாளர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இஸ்லாம் தொடர்பாகவும், முகமது நபிகள் தொடர்பாகவும் பல்வேறு ஆட்சேபகரமான கருத்துக்களை தெரிவித்ததாக புகார் தரப்பட்டது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உட்பட பல்வேறு அமைப்பினர் ஜெய்சங்கர் மீது மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளித்தனர். பொது இடத்தில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் மத ரீதியாக அவர் தகவல் தெரிவித்துப் பேசியதாக இஸ்லாம் அமைப்பினர் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சிங்காநல்லூர் போலீசார் ஜெய்சங்கர் மீது பொது இடத்தில் அத்துமீறி கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக பேசுதல் போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.