×

தாளவாடி மலைப்பகுதியில் சிறுத்தை தாக்கி பசுக்கன்று பலி

சத்தியமங்கலம், பிப்.5: தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கிராமங்களை ஒட்டி அமைந்துள்ள வனப்பகுதியில் வசிக்கும் சிறுத்தைகள் இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறி கிராமங்களில் உள்ள விவசாயிகள் தோட்டங்களில் புகுந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அடித்துக்கொல்வது தொடர்கதையாக உள்ளது. தற்போது, தாளவாடி அருகே சூசையபுரம் பகுதியில் அமைந்துள்ள கல்குவாரிகளில் சிறுத்தைகள் பகல் நேரத்தில் பதுங்கிக்கொண்டு இரவு நேரத்தில் சுற்றுவட்டார கிராமங்களில் புகுந்து விடுகின்றன. நேற்று முன்தினம் இரவு தாளவாடி அருகே உள்ள சிக்ககாஜனூர் ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கந்தசாமி என்பவரது தோட்டத்தில் நுழைந்த சிறுத்தை, அவரது பசு மாட்டின் கன்றுக்குட்டியை அடித்து கொன்று தின்றது. நேற்று காலை கன்றுக்குட்டி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கந்தசாமி உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அப்பகுதியில் சிறுத்தையின் கால் தடம் உள்ளதா? என ஆய்வு செய்தனர். சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாளவாடி மலைப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : hills ,Talawadi ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும்...