மண்ணச்சநல்லூர், பிப்.5: திருச்சியில் திமுக 11வது மாநில மாநாடு நடக்க உள்ளது. அதற்காக சிறுகனூர் அருகே மாநாட்டு பந்தல் அமைக்கும் பணியை திக தலைவர் வீரமணிநேற்று பார்வையிட்டார். திமுக சார்பில் இதுவரை நடந்துள்ள 10 மாநில மாநாடுகளில் 5 மாநாடுகள் திருச்சியில் நடந்துள்ளன. அந்த அளவிற்கு திமுக மாநில மாநாடு என்றால் அதில் திருச்சி முக்கிய பங்கு வகிக்கும். தற்போது வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திருச்சியில் திமுக மாநில மாநாட்டை நடத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
அதற்காக திருச்சி சிறுகனூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை திமுக முதன்மை செயலாளர் கேஎன் நேரு மும்முரமாக இரவு பகலாக மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று மாநாட்டு பணிகளை திக தலைவர் வீரமணி பார்வையிட்டார் அப்போது முதன்மை செயலாளர் கே.என். நேரு, மாவட்ட செயலாளர்கள் காடுவெட்டி தியாகராஜன், வைரமணி, லால்குடி எம்எல்ஏக்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், ஒன்றிய சேர்மன் தர் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.