நாமக்கல், பிப். 5: ஆயுர்வேத மேற்படிப்புக்கான ஒழுங்குமுறையை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. இதில் 58 வகையான நவீன அறுவை சிகிச்சைகளை, ஆயுர்வேத மருத்துவர்களும் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இதை இந்திய மருத்துவ சங்கம் கடுமையாக கண்டித்துள்ளது. இதனை திரும்ப வலியுறுத்தி நாடு முழுவதும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில், பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழகம் 4 மண்டலமாக பிரிக்கப்பட்டு பயிற்சி மருத்துவர்கள் மற்றும் டாக்டர்கள் டூவீலர் பேரணி சென்று மாவட்டங்களில் பிரசாம் செய்து வருகிறார்கள்.
சேலத்தில் நேற்று முன்தினம் துவங்கிய டூவீலர் விழிப்புணர்வு பேரணி, நேற்று நாமக்கல் வந்தடைந்தது. அவர்களை இந்திய மருத்துவ சங்கத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் டாக்டர் சதீஷ்குமார் தலைமையில், மருத்துவர்கள் வரவேற்றனர். மேலும் இந்த புதிய அறிவிப்பால் ஏற்படும் தீமைகள் குறித்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், நாமக்கல் அரசு மருத்துவமனையில் வளாகத்தில் பொது மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் பதாகைகளை ஏந்தி நின்று விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். இதில் டாக்டர்கள் சதீஷ்குமார் குழந்தைவேல், மல்லிகா, ரங்கநாதன், தனசேகரன், கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.