×

செஞ்சி அருகே ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டு சிறைதண்டனை தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு

விழுப்புரம், பிப். 5:  செஞ்சி அருகே ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த வழக்கில், முதியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே திருவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மன் என்ற மன் நாராயணன்(58). இப்பகுதியில் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சீட்டு கட்டினால், கூடுதலாக பணம் வழங்குவதாகக் கூறியதை நம்பி பொதுமக்கள் பலர் இந்த ஏலச்சீட்டில் சேர்ந்து பணம் கட்டிவந்துள்ளனர். 2012 முதல் 2014ம் ஆண்டு வரை பணம் செலுத்தியவர்களுக்கு, முதிர்வுகாலம் முடிந்த நிலையிலும் பணம் வழங்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து, ஏலச்சீட்டு பணம் கட்டி ஏமாந்த பொதுமக்கள், விழுப்புரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

அதன்ேபரில், மன்நாராயணன், அவருக்கு உடந்தையாக இருந்த கப்பை கிராமத்தை சேர்ந்த குமார்(46) ஆகியோர் மீது வழக்குபதிவு செய்தனர். விசாரணையில், டாக்டர் உள்ளிட்ட 12 பேரிடம் ரூ.11,15,950 மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து, அவர்களிடம் ஆவணங்களை கைப்பற்றிய போலீசார்  2 பேரையும்  கைது செய்தனர். இவ்வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி(பொ) கோபிநாத் நேற்று தீர்ப்பு அளித்தார்.

அதில், மன்நாராயணனுக்கு 7 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், குமார், இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். சிறைதண்டனை விதிக்கப்பட்ட, மன் நாராயணன் பலத்தபோலீஸ் பாதுகாப்புடன் கடலூர், மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : prison ,lottery ,Chief Criminal Court ,Ginger ,
× RELATED நான் இன்சுலின் கேட்கவில்லை என திகார்...