×

ஏர்வாடி அருகே கடல் நடுவே உள்ள மணல் திட்டுக்கு சுற்றுலா படகு போக்குவரத்து துவக்கம் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை கண்டு ரசிக்கலாம்

கீழக்கரை, பிப்.5: ஏர்வாடி அருகே கடல் நடுவே உள்ள மணல் திட்டுக்கு சுற்றுலா பயணிகள் படகு போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை கண்டு ரசிக்க முடியும். ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி அருகே பிச்சை மூப்பன் வலசை கிராமத்தில் இருந்து கடலுக்குள் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் மணல்திட்டு பகுதி உள்ளது. இங்கு அரியவகை பவளப் பாறைகள், கடல் பாசிகள், கடல்வாழ் உயிரினங்கள் காணப்படுகின்றன. இந்த மணல் திட்டு பகுதிக்கு ராமநாதபுரம் மாவட்ட மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் சுற்றுலா படகு சேவை தொடங்கப்பட்டது. மன்னார் வளைகுடா காப்பக இயக்குனர் மாரிமுத்து தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் வளர்ச்சி அலுவலர் கணேசலிங்கம் முன்னிலை வைத்தார். கண்ணாடி  இழை படகு போக்குவரத்தை ஏர்வாடி ஊராட்சி தலைவர் செய்யது அப்பாஸ் துவக்கி  வைத்தார். மண்டல அலுவலர் லோகநாதன், துணை மண்டல அலுவலர் கனகராஜ், காளிதாஸ்,  கவுன்சிலர் மலைராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முதலில் 12 பேர் பாதுகாப்பு ஜாக்கெட் அணிந்து மணல் திட்டு பகுதிக்கு பயணம் செய்தனர்.  

இதுகுறித்து மன்னார் வளைகுடா காப்பக இயக்குனர் மாரிமுத்து கூறுகையில், ‘‘ஒரே நேரத்தில் 12 பேர் வரை லைப் ஜாக்கெட் அணிந்து செல்லும் வகையில் கண்ணாடி இழை படகுகள் உள்ளன. இந்த படகின் மூலமாக கடலுக்கு அடியில் உள்ள அனைத்து வகையான அரிய வகை கடல் வாழ் உயிரினங்களான கடல் பாசிகள், புற்கள், கடல் ஆமைகள், டால்பின், கடல் குதிரை, கடல் பல்லி, சங்கு வகைகள், கடல் சிப்பிகள், மூளை வடிவ, விரல் வடிவ, தூண் வடிவ பவளப்பாறைகள் உள்ளிட்ட உயிரினங்களை கண்டு ரசிக்கலாம். இதேபோன்ற பகுதி அந்தமான் கடலில் உள்ளது.  அங்கு சுற்றுலா செல்ல பல ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.  ஆனால் இங்கு படகு போக்குவரத்துக்கு தலா ரூ.200 மட்டுமே கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த படகு இயக்கப்படுகிறது’’ என்றார்.

Tags : sand dunes ,Ervadi ,sea ,
× RELATED குஜராத் கடல் பகுதியில் 173 கிலோ போதைப்...